புதுடெல்லி; வடமேற்கு டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் செயல்படுவது குறித்து தலைமை செயலாளர் கண்காணிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வடமேற்கு டெல்லியில் லிபாஸ்பூர் கிராமத்தில் உள்ள தொழிற்சாலைகள் காற்று மாசு ஏற்படும் வகையில் உள்ளதாக என்ஜிஓ சார்பில் புகார் அனுப்பப்பட்டது. இந்த தொழிற்சாலையால் காற்று மாசு மட்டுமல்லாமல் அபாயகரமான மாசு கழிவுகள் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் உடல்நிலை பாதிக்கபடுவதாகவும் புகாரில் கூறப்பட்டு இருந்தது. மனுவில்,’ தொழிற்சாலையில் இருந்து விஞ்ஞான ரீதியாக கையாளப்படாமல் அதிக அளவு புகை, குப்பை மற்றும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
அதோடு சில வேதியியல் பொருட்கள், உலோக கல்நார், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவையும் இதில் அடங்கும். உற்பத்தி செயல்பாட்டின் போது இதுபோன்ற கழிவுகளை வெளியேற்றுவது கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. ஜவுளி சாயமிடுதல், எஃகு மற்றும் அமிலம் வெளியேற்றுதல், பல வகையான இரசாயனங்கள் அடங்கிய கழிவு நீரை நிலத்தடி நீரில் வெளியேற்றுதல் ஆகியவை நடக்கிறது’ என்று குறிப்பிட்டு கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏகே கோயல் தலைமையில் விசாரணைக்குவந்தது. அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இதுபோன்ற மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை கண்காணிக்கும் ெபாறுப்பு தலைமை செயலாளர் வசம் வருகிறது. எனவே அவர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அடிக்கடி சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அங்கு அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
வனத்துறை பொறுப்பு
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் புதிய ரன்வே அமைக்கும் பணிக்காக மரங்கள் வெட்டப்படுவது குறித்து தேசிய பசுமை தீர்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் முன்பு மனுத்தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணையின் போது, ‘ பொது பயன்பாட்டுத் திட்டத்தில் நேரடியாக தலையிட முடியாது என்றாலும், அதே நேரத்தில் சட்ட திட்டங்கள்படி பணி நடக்கிறதா என்பதை சரிபார்க்க முடியும். அந்தவகையில் மரங்கள் வெட்டப்படுவது குறித்து டெல்லியின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நேரடியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு வெட்டப்படும் மரங்களுக்கு சட்டப்பூர்வமாக என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்யலாம்’ என்று உத்தரவிட்டனர்.