தங்கவயல்: கொரோனா தொற்று ஊரடங்கு கால பாதிப்புகளில் இருந்து முழுமையாக விவசாயிகள் விடுபடாத நிலையில் வங்கி கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பங்காருபேட்டையில் விவசாய சங்கத்தினர் வங்கி அதிகாரிக்கு கோரிக்கை மனு வழங்கி உள்ளனர்.
தாலுகா அளவில் விவசாயிகளின் நலனுக்காக பி.எல்.டி.வங்கி (பிரைமரி லேண்டு டெவலப்மேன்ட் பேங்க்) செயல் பட்டு வருகிறது. இதில் விவசாய தொழிலுக்காகவும், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுக்காகவும் கடனுதவி பெற்றுள்ள விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் பதினைந்து நாட்களுக்குள் வங்கி கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும், அவ்வாறு செலுத்த தவறினால் நிலம், வீடு, போன்ற சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் விவசாய சங்கத்தின் தலைமையில் பங்காருபேட்டை பி.எல்.டி வங்கி அதிகாரிக்கு கோரிக்கை மனு வழங்கி உள்ளனர். அந்த மனுவில்,’ கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். விளை பொருட்களுக்கு விலை கிடைக்கவில்லை. விளை பொருட்களை விற்பனை செய்யவும் முடியவில்லை. விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்தனர். இதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இப்போதும் விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை. இந்த நிலையில் பி.எல்.டி.வங்கி 15 நாட்களுக்குள் வங்கி கடனை வட்டியுடன் செலுத்த தவறினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும், என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விவசாயிகளின் உண்மை நிலையை உணர்ந்து கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரி இருந்தனர்.