சிக்கமகளூரு: அரசுக்கு சொந்தமான பசவனஹள்ளி குளத்து பகுதி ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குளத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்தார். சிக்கமகளூரு மையப்பகுதியில் அமைந்துள்ள பசவனஹள்ளி குளத்தை பார்வையிட்ட பின்னர் மாவட்ட கலெக்டர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பசவனஹள்ளி குளம் விரைவில் தூர்வாரப்பட்டு சுத்தம் ெசய்யப்படும். குளத்தை சுற்றியுள்ள பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடமிருந்து மீட்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குளத்தை சுற்றி நீர் ஊற்றுகள் அமைக்கப்படும். குளத்தை சுற்றியுள்ள சுற்று வட்டார பகுதிகளில் வரும் கழிவுநீர் குளத்தில் கலக்காதவாறு கால்வாய்கள் அமைக்கப்பட்டு கிராமத்திற்கு வெளிப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை பகுதியில் கொண்டு செல்லப்படும்.
பொதுமக்கள் குளத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால்தான் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் சுத்தமாக வரும். எனவே குளத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் கார்டை காண்பித்து கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம்’’ என்றார்.இதையடுத்து பசவனஹள்ளியில் உள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று பார்வையிட்ட கலெக்டர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் கூறினார்.