புதுடெல்லி: டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) ஊழியர்களுக்காக 45,000 காதி முககவசங்களை தயாரிப்பதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (கேவிஐசி) தெரிவித்துள்ளது. டெல்லி போக்குவரத்து கழக ஊழியர்களுக்காக 45,000 முககவசங்களை தயாரித்து விநியோகிக்கும் ஆர்டர் பெறப்பட்டுள்ளது. அவற்றில் ஏற்கனவே 30,000 மாஸ்க்குகள் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள 15,000 மாஸ்க்குகள் அடுத்த ஒருவாரத்தில் வழங்கப்பட்டுவிடும் என கேவிஐசி தெரிவித்துள்ளது. இதுபற்றி கேவிஐசி மேலும் தெரிவிக்கையில்,”இங்கு தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் நீல வண்ணத்தில் டிடிசி லோகோ பொறிக்கப்பட்டு இரட்டை மடி கொண்ட கைத்தறி துணியால் தயாரிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.
கே.வி.ஐ.சி தலைவர் வினாய் குமார் சக்சேனா கூறுகையில்,”டெல்லி அரசாங்கத்தால் காதி முககவசங்கள் பெருமளவில் வாங்குவது காதியை பிரபலமடைய செய்துள்ளதோடு, பல்வேறு அரசுத் துறைகளில் காதியை ஏற்றுக்கொள்வதையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய பெரிய ஆர்டர்கள் காதி கைவினைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது நிதி நெருக்கடியை சமாளிக்க அவர்களுக்கு இது உதவியது.கே.வி.ஐ.சி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எட்டு மாதங்களுக்குள் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட முககவசங்களை விற்பனை செய்துள்ளது, இதில் இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு மட்டும் 12.30 லட்சம் முககவசங்களும் அடங்கும்\\”என்றார்.
முன்னதாக, அருணாச்சல பிரதேசம்(1.60 லட்சம்), ஜம்மு-காஷ்மீர் (7.50 லட்சம்) அரசு நிர்வாகங்களால் முககவசங்கள் வாங்கப்பட்டன. மேலும் பொது மக்களைத் தவிர, ராஷ்டிரபதி பவன், பிரதமர் அலுவலகம் மற்றும் பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை பிரிவுகளிடமிருந்தும் மீண்டும் உத்தரவுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.