×

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகமாகி வரும் நிலையில், கால நேரமின்றி 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக படிப்படியாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பரவல், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகமாகி வருகிறது. இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருவான உருமாறிய கொரோனாவும், இந்தியாவில் தற்போது பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதில், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக, கடந்த 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், இணை நோய் உடைய 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்திலும் போடப்படுகிறது. இதற்காக, கோ-வின் 2.0 செயலி மூலம் மூத்த குடிமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும், நேரடியாக வந்து தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி, அரியானா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், இந்த மாநிலங்களின் பாதிப்பு விவரங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ``தடுப்பூசி போடுவதற்கான கால நேரத்தை அரசு நீக்கி உள்ளது. மக்கள் தங்களின் வசதிக்கேற்ப, 24 மணி நேரமும் அரசு, தனி்யார் மருத்துவமனைகள், மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்,’ என்று கூறியுள்ளார்.

* தலாய் லாமா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
தலாய் லாமாவுக்கு தடுப்பூசி போடும்படி, தர்மசாலாவில் செயல்படும் மத்திய திபெத்தியன் நிர்வாகம் கேட்டு கொண்டதால், காங்ரா மாவட்ட நிர்வாகம் அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றதையடுத்து, அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

* 24 மணி நேரத்தில் 14,989 பாதிப்பு
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 14,989 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7,863 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிராவில் மட்டும் 16,012 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

Tags : Corona ,Tamil Nadu ,Union Health Minister ,Harsh Vardhan , Corona can be vaccinated 24 hours a day in 8 states including Tamil Nadu: Union Health Minister Harsh Vardhan
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...