×

டிடிவி.தினகரனுடன் மோதல் எதிரொலி; அரசியலுக்கு சசிகலா முழுக்கு: பரபரப்பு அறிக்கை

சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்குவதாக, ஜெயலலிதாவின் தோழியும் டிடிவி தினகரனின் சித்தியுமான சசிகலா நேற்று இரவு அதிரடியாக அறிவித்தார். டிடிவி தினகரனுடன் கடந்த சில நாட்களாக நடந்த மோதல் காரணமாகத்தான் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவரை பதவி விலகும்படி சசிகலா உத்தரவிட்டார். தானே முதல்வராக திட்டமிட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கி, ஆட்சியை கவிழ்க்க முயன்றார். அதேநேரத்தில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியை, முதல்வராக பதவி ஏற்கும்படி கூறினார். பின்னர் கட்சியில் துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தார். தினகரன்தான் ஆட்சியை கன்ட்ரோல் செய்து வந்தார். சில நாட்களிலேயே எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சியில் இருந்து தினகரனை எடப்பாடி பழனிசாமி வெளியேற்றினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்களையும் அதிமுகவில் சேர்த்துக் கொண்டார். பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.

இந்தநிலையில் சிறையில் இருந்து கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். கொரோனா காரணமாக ஒரு வார ஓய்வுக்கு பிறகு தமிழகம் வந்தார். பெங்களூரில் இருந்து கிளம்பிய அவரை தமிழக எல்லையான ஓசூரில் அமமுக தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து சென்னை வரை 23 மணி நேரம் பயணம் செய்து தொண்டர்களை சந்தித்தார். அப்போது, மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று அறிவித்தார். பெங்களூரில் இருந்து நேராக ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் தமிழக அரசோ, சமாதியை மூடிவிட்டது. இதனால் அவர் நேரடியாக வீட்டுக்குச் செல்லாமல், எம்ஜிஆரின் தோட்டத்துக்குச் சென்று அவரது படத்துக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி விட்டு வீட்டுக்கு வந்தார்.

அதன்பின்னர் ஒரு வாரம் ஓய்வுக்குப் பிறகு ஒரு சிலரை சந்தித்தார். சசிகலா சென்னை வந்தவுடன் அதிமுகவில் உள்ள பல அமைச்சர்கள் அவரை சந்திப்பார்கள். தென் மாவட்ட எம்எல்ஏக்கள் பலரும் அவரை சந்திப்பார்கள். கட்சியே அவர் பின்னால் சென்று விடும் என்றெல்லாம் கற்பனையில் சிலர் கூறி வந்தனர். சசிகலாவும் அதைத்தான் எதிர்பார்த்தார். ஆனால் சசிகலாவை அதிமுகவின் ஒரு ஒன்றியச் செயலாளர்  கூட சந்தித்துப் பேசவில்லை. இதனால் சசிகலா அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான், என்ன பிரச்னை, தமிழகத்தில் என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள், நலம் விரும்பிகள் பலரும் டிடிவி தினகரனின் போக்கால்தான் ஆட்சியும், கட்சியும் நம்மை விட்டுச் சென்றன.

இன்று ஒருவர் கூட வராமல் போனதற்கும் அவர்தான் காரணம். அவருடன் இருந்த பல தலைவர்கள் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் சென்று விட்டனர். இப்போது அவருடன் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே உள்ளனர். அவர்களும் எப்போது வெளியேறலாம் என்று காத்திருக்கின்றனர். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அவர் முடிவு எடுக்கிறார். யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை. யாரையும் மதிப்பதில்லை என்று சரமாரியாக புகார்களை தெரிவித்தனர். இதுகுறித்து டிடிவி தினகரனிடம் அவர் விசாரித்துள்ளார். அதன்பின்னர் சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. கடந்த 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவுக்காக சசிகலாவின் வீட்டுக்கு தினகரன் வந்தார்.

அதன்பின்னர் இருவரும் சந்திக்கவில்லை. நேற்று முன்தினம்தான் இருவரும் சந்தித்தனர். அப்போது, ‘‘பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தான் பேசியதாகவும், ஆரம்பத்தில் அவர்கள் ஆதரவாக இருந்தனர். இப்போது அமமுகவினரை பாஜக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்’’ என்று தினகரன் சசிகலாவிடம கூறியுள்ளார். இதற்கு எனக்கு உடன்பாடு இல்லை என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். அப்போது கூட இருவரும் சரியாக பேசிக்ெகாள்ளவில்லை. அவர் சென்ற பிறகுதான் சில சமுதாய தலைவர்களை சசிகலா சந்தித்துப் பேசினார். இந்தநிலையில் தினகரனின் போக்கு பிடிக்காமல் இருந்த சசிகலா என்ன செய்வது என்று நெருங்கிய உறவினர்களான இளவரசி, அவரது மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பின்னர் நேராக ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவிக்கலாம் என்று திட்டமிட்டார். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது. தான் அரசியலில் இருந்து விலகும் கடிதத்தை தன்னுடைய டிவி சேனலுக்கு அனுப்பினார். இந்த தகவல் டிடிவி தினகரனுக்கு தெரியவந்தது. அவர் நேராக சசிகலாவின் வீட்டுக்கு ஓடி வந்தார். பின்னர் சசிகலாவிடம் அரசியலில் இருந்து விலகும் முடிவை கைவிடும்படி சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், அவரது ஆலோசனையை ஏற்க சசிகலா மறுத்து விட்டார். இதனால் அவரது கடிதத்தை வாங்கி வந்து நிருபர்களிடம் தினகரன் பேட்டியாக கொடுத்தார்.

அப்போதும் தன்னிடம் சசிகலா எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. நான் அவரை வற்புறுத்தினேன். அவர் கேட்கவில்லை. அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார். இதனால் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இடையே உள்ள மோதல் வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது. இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் இருந்து விலகுவது குறித்து சசிகலா நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கை: நான் என்றும் வணங்கும் என் அக்கா, ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர,

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி என்று ஜெயலலிதா நமக்கு காட்டியவர்களை தடுத்து, பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ெஜயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் என்றும் தெய்வமாக வணக்கும் ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாஜ மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சசிகலா சொல்லியிருக்கிற காரணங்களை அரசியல் ரீதியாக அனைவரும் வரவேற்க வேண்டும்.

அவரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறார். அவருடைய அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

சசிகலா முடிவால் சோர்வடைந்து விட்டேன் -டிடிவி
சசிகலாவை சந்தித்த பிறகு டிடிவி.தினகரன் அளித்த பேட்டி: தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறினால், அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று நினைத்தார். அதனால் தான் அவ்வாறு கூறினார். தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார். யாரும் ஒற்றுமையாக இல்ைல என்பதால், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார். எங்களை அதிமுகவில் இருந்து நீங்கியதால் தான் வேறு கட்சி ஆரம்பித்தோம். அமமுகவில் இருப்பவர்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள்.

அவர் மனதில் உள்ள கருத்தை அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அமமுக நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இந்த முடிவு தொண்டர்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய கூறினேன். அதற்கு இல்லை என்று கூறிவிட்டார். வாக்கு வங்கி பிரியுமா என்பது குறித்து நான் கூற முடியாது. அமமுக தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து பேசி வருகிறோம். 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கிறோம். விரைவில் எந்ததெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன். முடிவுக்கு வந்த பிறகு தெரிவிப்பேன். இவ்வாறு கூறினார்.

Tags : DTV.Dhinakaran ,Sasikala , Echo of the clash with DTV.Dhinakaran; Sasikala dive into politics: sensational statement
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது