திருவனந்தபுரம்: தங்க ராணி சொப்னாவுக்கு கொடுத்த சம்பளம் ரூ.16.15 லட்சத்தை சிவசங்கர் உள்ளிட்ட 3 அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க நிதித்துறை பரிந்துரைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சல் மூலம் துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக தங்கராணி சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் சொப்னா தலைமையிலான கும்பல் இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தியதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக என்ஐஏ, சுங்க இலாகா, மத்திய அமலாக்கத்துறை ஆகியோர் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ெசாப்னா சம்பளத்துக்காக அரசு செலவழித்த ரூ.16.15 லட்சத்தை ஜிஎஸ்டி தவிர்த்து, 3 அதிகாரிகளிடமும் இருந்து சமமாக வசூலிக்க வேண்டும் என்று நிதித்துறை பரிந்துரை செய்து உள்ளது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கர், விண்வெளி பூங்கா திட்டத்தில் சொப்னாவை நியமித்த கேஎஸ்ஐடிஐஎல் (கேரள மாநில ஐடி உள்கட்டமைப்பு லிமிடெட்) இயக்குநர் ஜெயசங்கர் பிரசாத், விண்வெளி பூங்கா சிறப்பு அதிகாரி சந்தோஷ் குறுப்பு ஆகியோர் அடங்குவர்.
உரிய கல்வித்தககுதி இல்லாத சொப்னாவை விண்வெளி பூங்காவில் பணிக்கு அமர்த்தியதில் முக்கிய பங்கு சிவசங்கருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 3 பேரின் திட்டமிட்ட நகர்வு காரணமாகவே. சொப்னாவுக்கு விண்வெளி பூங்கா திட்டத்தில் வேலை கிடைத்து உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணம் கோரப்பட்டிருப்பினும் பிடபிள்யூசி இன்னும் அதை செலுத்தியபாடிவில்லை. நிதி ஆய்வுப்பிரிவின் அறிக்கையை பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அதை ஐடி செயலாளரிடம் ஒப்படைத்து உள்ளார். ஆனால் மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயசங்கர் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சி நடந்து வருகிறது.