தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலையின் ஓரத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு தா.பழூர், அணைக்குடம், ஜெயங்கொண்டம் உந்து நிலையத்திற்கு செல்கிறது. அது மட்டுமின்றி தா.பழூர் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தெருக்களில் குழாய்கள் அமைக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தா.பழூரில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் இரு பக்கங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் ஜெயங்கொண்டம் நோக்கி செல்கிறது.
இதில் தா.பழூரில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையின் மேற்கு பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணா செல்கிறது. சில இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் நாய், பன்றிகள் என படுத்து உறங்கி ஓய்வெடுத்தும் செல்கின்றன. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். தினகரன் செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினகரன் நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.