சென்னை: நீர் மேலாண்மையில் கோட்டை விட்டதால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த நீரை கூட சேமிக்க முடியாமல் விட்டதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி, பாலாறு, தாமிரபரணி ஆற்றில் மழை நீர் வீணாக கடல் கலக்கும் அவல நிலை தான் உள்ளது.
பாலாறு, பெண்ணையாறு, காவிரி, தாமிரபரணி உட்பட 17 ஆற்றுப்படுகையில் தடுப்பணை அமைத்து தண்ணீரை சேமித்து வைக்கும் திட்டமும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டன. ஒரு தடுப்பணை மூலம் குறைந்தது, 0.30 டிஎம்சி முதல் 1.50 டிஎம்சி சேமிக்க முடியும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 62 தடுப்பணைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணைகள் சிறியதாகவே அமைக்கப்பட்டுள்ளது. 0.15 டிஎம்சி கூட தேக்கி வைக்க முடியாது. பாலாற்றில் மட்டுமே அரை டிஎம்சி அளவுக்கு தண்ணீர் சேமித்து வைக்கும் அளவுக்கு 2 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால், எனவே, இந்த தடுப்பணைகளால் எந்த வித பயனும் இல்லாமல் போய் விட்டது. மேலும், தடுப்பணைகள் அனைத்தும் தரமில்லாமல் கட்டப்பட்டதால் முழு அளவு நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எத்தனை ஏரி, அணைகள்
தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகள் மூலம் 224 டிஎம்சி நீர் சேமிக்கப்படுகிறது. இதை தவிர்த்து 14,139 குளங்கள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 39,242 குளங்கள், 12 லட்சம் கிணறுகள், 39 லட்சம ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இவை தான் பாசனம் மற்றும் குடிநீரின் முக்கிய ஆதாரமாக தமிழகத்துக்கு இருந்து வருகிறது.
எந்த ஆறு... எவ்வளவு வீண்
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக காவிரி ஆற்றில் 100 டிஎம்சி, பெண்ணை ஆற்றில் 9.09 டிஎம்சி, தாமிரபரணி ஆற்றில் 11.39 டிஎம்சி, வைப்பாற்றில் 4.73 டிஎம்சி, வெள்ளாறு 21.47 டிஎம்சி, கோதையாறு 14.5 டிஎம்சி, சென்னையில் கூவம், அடையாறு, கொசஸ்தலையாற்றில் 25 டிஎம்சி, வைகையாற்றில் 25 டிஎம்சி, பாலாற்றில் 40 டிஎம்சி, பரம்பிகுளம், ஆழியாற்றில் 50 டிஎம்சி என 17 ஆற்றுப்படுகைகளில் ஒவ்வொரு ஆண்டும் 400 டிஎம்சிக்கு மேல் மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது.
ஆண்டுக்கு 4,343 டிஎம்சி தண்ணீர்
தமிழகத்தில் இயல்பான மழையளவு ஆண்டுக்கு 911.60 மி.மீ ஆகும். இது, 4,343 டிஎம்சிக்கு சமமானது. ஆனால், மாநிலத்தின் மொத்த மேற்பரப்பு நீர்வள ஆதாரம் 636 டிஎம்சி ஆகும். அரசின் அலட்சியத்தால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.
Tags : Tamil ,Nadu , The government of Tamil Nadu, which has lost ground in water management, has not been able to save even the water obtained from the northeast monsoon