சென்னை: அதிமுக-பாமக இடையே தொகுதி உடன்பாடு இறுதியான நிலையில் 23 தொகுதிகளுக்கான பட்டியலை அதிமுகவிடம் பாமக ஒப்படைத்துள்ளது. இதில், பாஜ கேட்ட தொகுதிகளையும் பாமக கேட்டு அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் அதிமுக-பாமக இடையில் மட்டும் கூட்டணி உடன்பாடு முடிவடைந்து 23 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 23 சீட்களில் எந்தெந்த தொகுதி வேண்டும் என்பது குறித்த உத்தேசப்பட்டியலை பாமக மேலிடம் அதிமுகவிடம் வழங்கியுள்ளது.
அதில் வேளச்சேரி, விக்கிரவாண்டி, திருப்போரூர், கும்மிடிப்பூண்டி, சங்கராபுரம், செங்கல்பட்டு, ஆரணி, பென்னாகரம், வீரபாண்டி, காட்டுமன்னார்கோவில், அணைக்கட்டு, ஓசூர், கலசப்பாக்கம், நெய்வேலி, சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, குன்னம், திண்டிவனம், பண்ருட்டி, திருத்தணி, மேட்டூர், ஜெயங்கொண்டம், ஆற்காடு ஆகிய 23 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ளது. 2016 தேர்தலில் அதிமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளையும் பாமக கேட்டுள்ளது. குறிப்பாக, விக்கிரவாண்டி, கும்மிடிப்பூண்டி, வீரபாண்டி, காட்டுமன்னார்கோவில், கலப்பாக்கம், திருத்தணி உள்ளிட்ட 10க்கு மேல், அதிமுக போட்டியிடுவதாக முடிவு செய்திருந்த தொகுதிகளையும் பாமக தனக்கு ஒதுக்கும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜ-அதிமுக இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில் பாமக 23 தொகுதிகளுக்கான பட்டியலை அதிமுகவிடம் ஒப்படைத்துள்ளது அதிமுக தலைமைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் பாமக தொகுதி பட்டியலை கொடுத்தாலும் பாஜ, தேமுதிக இடையேயான தொகுதி உடன்பாடு முடிவடைந்த பிறகே பாமகவின் தொகுதி பட்டியலை அதிமுக ஆலோசிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.