திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சென்னையை ஒட்டிய புறநகர் பகுதி ஆகும். சென்னை மாநகரப் பேருந்துகளை இயக்க முடியாது என அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மறுத்த நிலையில் கடந்த 2006 மற்றும் 2011 வரை ஆண்ட திமுக அரசு சுமார் 200க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகளை திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் வரை இயக்கியது. தற்போது நடைபெறும் இந்த அதிமுக ஆட்சியில் இவற்றில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி விட்டது. குறிப்பாக திருப்போரூர் முதல் குன்றத்தூர், திருப்போரூர் முதல் கீழ்க்கட்டளை, திருப்போரூர் முதல் திருப்பெரும்புதூர், இசிஆர் வழியாக திருப்போரூர் முதல் உயர்நீதிமன்றம், அடையாறு முதல் மானாம்பதி, திருவான்மியூர் முதல் கரும்பாக்கம், அடையாறு முதல் முள்ளிப் பாக்கம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.
இது ஒரு வகையில் கிராமப்புற மக்களை வஞ்சிப்பது போல் உள்ளது. இதனால், படிப்பு மற்றும் பணி காரணமாக சென்னை மாநகருக்குள் வருவதில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படும் நிலை தான் உள்ளது. மேலும், ஒரு சில மாநகர பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி அடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் மாநகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.