×

பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

புதுடெல்லி: பீகார் தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில், அசாமில் முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அவர் மற்ற 4 மாநிலங்களுக்கும் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதாகவும், தலைமைக்கு எதிராக  செயல்படும் 23 அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’ வைக்கும் வகையில் களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அப்போது தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது  பதவியை ராஜிநாமா செய்தார். கட்சியின் இடைக்கால தலைவராக இருமுறை சோனியா காந்தி அறிவிக்கப்பட்டார். நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநில தேர்தல் கிழக்கு பகுதி பொறுப்பாளராக செயல்பட்டார். அவர் அடுத்தாண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் பேரவை  தேர்தலுக்காக தற்போது அம்மாநிலத்தில் வியூகங்களை வகுத்து வருகிறார். மேலும், உத்தரபிரதேசத்தில் கட்சியை பலப்படுத்துவதற்காக நேற்று மட்டும் எட்டுக்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களிலும் பிரியங்கா காந்தி பங்கேற்று வருகிறார். ஆனால், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பீகார் மாநில தேர்தலில் பிரியங்கா பிரசாரம்  செய்யவில்லை. அவர் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை பீகாரில் தவிர்த்தார்.

உத்தரபிரதேசத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் கவனம் செலுத்தாத பிரியங்கா காந்தி, தற்போது அசாமில் நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.  இதுகுறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் 23 அதிருப்தி மூத்த தலைவர்களை சமாளிப்பதற்காக, உத்தரபிரதேசத்தில் கவனம் செலுத்திய பிரியங்கா காந்தி தற்போது அசாமில் பிரசாரம் செய்து வருகிறார்.   மேலும் அவர் ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்க வாய்ப்புள்ளது. தென்மாநிலங்களான கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் ராகுல் பிரசாரம் செய்து வருகிறார். அதேநேரம் பிரியங்காவும் தனது இரண்டு நாள் பிரசாரத்தை  அசாமில் தொடங்கி உள்ளார்.

 ராகுலின் செயலை பலவீனப்படுத்தும் சிலரின் மறைமுக முயற்சிகளுக்கு எதிராக அவர் களம் இறங்கி உள்ளார். இது, அதிருப்தி தலைவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியாக இருக்கும். அசாமில் பாஜகவுடன் நேருக்குநேர் காங்கிரஸ்  மோதுவதால், அசாம் தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.  சமீபத்தில் போடோலாண்ட் மக்கள் முன்னணி பாஜக கூட்டணியில் இருந்து காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திகிறது. காங்கிரஸ் கட்சியில் புதிய  தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. ராகுல்காந்திக்கு எதிராக சில தலைவர்கள் செயல்பட்டு வரும் நிலையில், பிரியங்காவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட செய்ய  தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. அதிருப்தி தலைவர்களின் கருத்துகள் அதிகரித்துவரும் நிலையில், அதனை முறியடிக்கவும், ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்தவும் அசாமில் பிரியங்கா தனது  தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்’ என்றனர்.

கையெழுத்து போட்டதற்கு வருந்தவில்லை

கடந்தாண்டு ஆகஸ்டில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி கூறுகையில்,  ‘காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் ‘ஜி-23’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அடையாளப்படுத்துவது தவறு. ஜம்முவில் நடந்தது எதிர்ப்பாளர்களின் கூட்டம் அல்ல; கட்சியை வலுப்படுத்த நாங்கள் ஒன்றாக இணைந்துள்ளோம்.  சோனியாவுக்கு கடிதம் எழுதியதின் நோக்கமே, கட்சியை சீர்திருத்தவும், தேர்தல்களை நடத்துவதுமே ஆகும்.

நாங்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரானவர்கள் அல்ல; சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் நான் கையெழுத்திட்டதற்காக வருந்தவில்லை. சோனியாவின் உடல்நிலை சரியில்லை என்பதால், ராகுலே மீண்டும் தலைவராக  வேண்டும் என்று கட்சியில் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி தனது வெற்றியை தொடங்கும் போது, பாஜக வீழ்ச்சியடையும்’ என்றார்.

Tags : Asamil Priyanka ,Gandhi Field ,Bihar Council ,Sek , Why did Priyanka Gandhi land in Assam when she was absent from the Bihar Assembly elections ?: Coming to another state; ‘Czech’ for disgruntled leaders
× RELATED பீகார் பேரவை ஒத்திவைப்பு