×

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!

டிஸ்பூர்: அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்டம் ஒன்றில் தோட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து பிரியங்கா காந்தியும் உற்சாகமாக தேயிலை பறித்தார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 27ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதனால் அசாமில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் மாணவர் கூட்டங்களில் உற்சாகமாக பங்கேற்று இளைஞர்களின் ஆதரவை பெற்று வருகிறார். இந்நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று அசாம் சென்ற ராகுல்காந்தி சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா, தேயிலை தோட்டம் ஒன்றில் சாதாரணமான வேலையாள் போன்று தேயிலை பறித்தார்.

அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, பிஸ்வநாத் என்ற இடத்தில் தோட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து தலையில் கூடையை சுமந்து தேயிலை கொழுந்துகளை பறித்தார். இதையடுத்து தோட்ட தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா, அவர்கள் தயாரித்து அளித்த தேநீரை பருகினார். அனைவரும் சாதாரணமாக அருந்தும் தேநீருக்கு பின்னால் இருக்கும் கூலி தொழிலாளர்களின் கடின உழைப்பை அறிந்து கொண்டுள்ளதாக பிரியங்கா அப்போது தெரிவித்தார். மேலும் பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரை பகுதியில் உள்ள பல மாவட்டங்களில் பிரியங்கா காந்தி பரப்புரையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Priyanka Gandhi , Plantation Worker, Tea, Priyanka Gandhi
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!