சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். மோடி அலையை உருவாக்கி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மோடியை வெற்றி பெற செய்த பெருமை தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரையே சேரும். இவர் தனது இந்திய அரசியல் செயல்பாடு குழு மூலம், தற்போது, தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணியாற்றி வருகிறார். பஞ்சாபில், கடந்த 2017ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க பிரசாந்த் கிஷோர் பணி புரிந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் காங்கிரசுக்காக பணியாற்ற ஒப்பு கொண்டுள்ளதாக அமரீந்தர் சிங் தெரிவித்தார்.