சென்னை: சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மதுரவாயல் - வாலாஜா இடையிலான சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணக்கு வந்தது.
அப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இந்த சாலையில் பயணித்துள்ளாரா என கேள்வி எழுப்பினர். சமீபத்தில் இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணித்த நீதிபதி ஒருவர் கடும் அச்சம் தெரிவித்துள்ளார். டெல்லியிலிருந்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை செயலாளரை இந்த சாலையில் வேலூர் பொற்கோவிலுக்கு பயணித்து அறிக்கை தாக்கல் செய்ய சொல்லுங்கள் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்த நீதிபதிகள், 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டுமென்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ‘‘டெல்லியிலிருந்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை செயலாளரை இந்த சாலையில் வேலூர் பொற்கோவிலுக்கு பயணித்து அறிக்கை தாக்கல் செய்ய சொல்லுங்கள் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.’’