சென்னை: சிலிண்டர் விலை நான்காவது முறையாக நேற்று உயர்த்தப்பட்டதை அடுத்து, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கச் செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:சமையல் எரிவாயு விலையை கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை உயர்த்தி அதன் காயம் ஆறாத நிலையில், நேற்று மார்ச் முதல் நாள் நான்காம் முறையாக மேலும் ரூ.25 விலை உயர்த்தப்பட்டு சிலிண்டர் விலை ரூ.835ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு யாரையும் பாதிக்காது என்று பாஜ தலைவர்கள் கூறுவது வியப்பாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து, அதன் விளைவாக அத்தியாவசிய பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்து வருகின்றன. விலை உயர்வுகள் குறித்து, சிறிதும் கவலைப்படாத இரக்கமற்ற அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து கவலைப்படாமல் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயர்த்தப்பட்ட விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.