×

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குடியரசு தலைவர் முதல் சாமானிய மக்கள் வரை நன்கொடை : இதுவரை ரூ.2,100 கோடி வசூல்

அயோத்தி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.

ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்று கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடை திரட்டும் பணி கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி தொடங்கியது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். நாடு முழுவதும் 5.25 லட்சம் கிராமங்களில் நன்கொடை வசூல் செய்யும் பணி கடந்த பிப்ரவரி 27-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

அதன்படி 45 நாட்களாக நடைபெற்று வந்த நன்கொடை பெறும் பணி முடிந்த நிலையில், 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கோவில் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது எனவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 40 லட்சம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு மாநிலங்களில் நகரங்கள், கிராமங்களில் வீடு, வீடாக நேரில் சென்று நிதி வசூல் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குடியரசு தலைவர் முதல் சாலையோரத்தில் வசிக்கும் சாமானிய மக்கள் வரையில் பக்தியுடன் நிதி வழங்கி பகவான் ராமர் உடன் தங்களை இணைத்து கொண்டிருப்பதாக  விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags : the ,President ,Ram Temple ,Ayodhya , அயோத்தி
× RELATED நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்...