சென்னை: பாஜகவுக்கான தொகுதி பங்கீடு நாளை அல்லது நாளை மறுநாள் தெரிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து முக்கிய கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணியே தொடர அதிமுக விரும்பியது. இந்நிலையில், அதிமுகவுடன், பாமக நேற்று முன்தினம் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான பாஜ, அதிமுகவிடம் 60 தொகுதிகள் கேட்டு அடம் பிடித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம் பேசினார். அமித்ஷாவுடன் நேற்று இரவு அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்ததை நடத்திய நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பங்கு முக்கியமானது. அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏதும் இல்லை.
பாஜக தொகுதிப்பங்கீடு குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும். அமமுகவுடன் இணைவது குறித்து அதிமுக தான் முடிவு செய்யும். அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுகிறோம். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது. விலை உயர்வை கட்டுப்படுத்துவதை அரசு கருத்தில் கொண்டுள்ளது எனவும் கூறினார்.