புதுடெல்லி: கர்நாடகாவின் கேசில்ராக்கில் இருந்து கோவாவின் மர்கோவா ரயில் நிலையங்களுக்கு இடையே 60 கிமீ தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில் பாதை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மகாவீரர் வனவிலங்கு காப்பகம், மொல்லம் தேசியப் பூங்கா ஆகிய இரு வனவிலங்கு சரணாலயங்களை கடந்து செல்கிறது. இங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொண்டால் காடுகள் அழிக்கப்படுவதோடு, பல்லுயிர் பெருக்கத்தில் பாதிப்புகள் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ரயில் திட்டத்திற்காக மேற்கு தொடர்ச்சி மலையில் 140 ஹெக்டேர் காடுகளை ரயில்வே துறையிடம் ஒப்படைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 50,000 மரங்கள் வெட்டப்படும். இதற்கு சமமான காடு வளர்ப்புக்கு தேவையான தொகையை ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காடுகள் வழங்கப்பட்டுள்ளன. காடுகளை பாதுகாக்க வேண்டிய அரசே காடுகளை அழிக்க ஒப்புதல் அளித்துள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.