நல்லம்பள்ளி: சேலம் மாவட்டம், ஓமலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநாடு, நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்க தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் சென்றனர். அப்போது, நல்லம்பள்ளி அருகே பாளையம் டோல்கேட்டில், அக்கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமிக்கு, கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், நடைமுறைகள் சரியில்லை எனவும் கூறி, தவாகவினர் டோல்கேட் பூத்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், அவர்கள் ஓமலூர் நோக்கி சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் டோல்கேட்டில் பதிவான சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மாநாட்டிற்கு சென்றவர்கள் திரும்பி வரும் போது, மீண்டும் பிரச்னையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், 20க்கும் மேற்பட்ட போலீசார், பாளையம் சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.