×

மேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று ஐஏஎன்எஸ் மற்றும் சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் தற்போது ஆளும் கட்சிகள் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் மாநில பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஐஏஎன்எஸ்  மற்றும் சி-வோட்டர் நிறுவனங்கள் மேற்கண்ட 5 மாநில மக்களின் மனநிலையை  அறியும் பொருட்டு கருத்துக் கணிப்பை நடத்தி உள்ளது. அதன்படி,  மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், கேரளாவில் ஆளும் இடதுசாரி  கூட்டணி, அசாமில் பாஜக கூட்டணி ஆகியன ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும்  என்றும், தமிழகத்தில் அதிமுக, புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை  இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவை  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களில் 824 தொகுதிகளுக்கு தேர்தல்  நடைபெறவுள்ளது. அதில், 70,608 மாதிரிகளின் அடிப்படையில்  கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. 3 முதல் 5 சதவீதம் அளவிற்கு பிழைகள்  ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, அசாம்  மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கருத்துக் கணிப்பு முடிவுகள்  சரியானதாக இருக்கும். மேற்குவங்கத்தில் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது. மேற்குவங்க  முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி 294 இடங்களில் 156  இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இக்கட்சிக்கு  2.1 சதவீத வாக்கு சரியும். மற்றபடி பாஜக 38 சதவீத வாக்குப் பங்கைப் பெற்று  100 இடங்களைப் கைப்பற்றும் இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களை  கைப்பற்றும். கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) கடந்த 2016ம்  ஆண்டு வெற்றியை போன்று இந்த 87 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும்.  எல்.டி.எஃப் 3.4 சதவீதமும், காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப் 6.2 சதவீத  வாக்குகளை இழக்கும். இந்த கூட்டணி 51 இடங்களை கைப்பற்றும்.

அசாமில்,  ஆளும் பாஜக முதல்வர் சர்பானந்தா சோனோவால், 2016ல் வென்றது போல் 70 இடங்களை  கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைப்பார். காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களை  கைப்பற்றும். புதுச்சேரியில், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி  அமலில் உள்ள நிலையில் இங்கு, அதிமுக - பாஜக கூட்டணி 19 இடங்களை கைப்பற்றி  ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், திமுக தலைமையிலான  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) மூன்றில்  இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறும். அதாவது 234  இடங்களில் 158 தொகுதிகளை கைப்பற்றும். அதேநேரத்தில் ஆளும் அதிமுக - பாஜக  கூட்டணிக்கு 62 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அதிமுகவை பொறுத்தமட்டில் 15  சதவீத வாக்குகளை இழக்கும். கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்  வென்றதை விட 60 இடங்களை திமுக கூட்டணி அதிகமாக பெறும். வாக்கு சதவீதமும் 2  சதவீதம் உயரும்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 58  முதல் 66 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. கடந்த 2016 தேர்தலில் அதிமுக  கூட்டணி 136 இடங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது 62 இடங்களில்  ேதால்வியடைய வாய்ப்புள்ளது. திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்  கூட்டணியின் வாக்கு சதவீதம் 2016ல் பெற்ற 39.4 சதவீதத்திலிருந்து 41.4  சதவீதமாக அதிகரிக்கும். அதிமுக தலமையிலான கூட்டணி 28.6 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை தரம் மிக மோசம்
கடந்த ஓராண்டில் தங்களது வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா? என்ற கேள்விக்கு மேற்குவங்கத்தில் 26.86 சதவீதம் பேர் உயர்ந்துள்ளதாகவும், 31.21 சதவீதம் பேர் அப்படியே இருப்பதாகவும், 41.39 சதவீதம் பேர் மோசமடைந்துள்ளதாகவும், 0.54 சதவீதம் பேர் பதில் கூற விரும்பவில்லை என்றும் கூறினர். கேரளாவில், 21.76 சதவீத மக்கள் தங்களது வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது என்றும், 35.45 சதவீதம் பேர் எந்த மாற்றமும் இல்லை என்றும், 42.72 சதவீதம் பேர் மோசமடைந்துள்ளதாகவும், 0.08 பேர் கருத்து கூறவில்லை என்றும் கூறினர்.

அசாமில் 19.26 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதாகவும், 23.54 சதவீதம் பேர் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், 48.58 சதவீதம் பேர் மோசமடைந்துள்ளதாகவும், 8.62 சதவீதம் பேர் பதில் கூற விரும்பில்லை என்றும் கூறினர். தமிழகத்தில் 11.85 சதவீதம் பேர் தங்களது வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், 30.29 சதவீதம் பேர் எந்த மாற்றமும் இல்லை என்றும், 52.54 சதவீதம் பேர் மோசமடைந்துள்ளதாகவும், 5.32 சதவீதம் பேர் கருத்து கூற விரும்பவில்லை என்றும் கூறினர். புதுச்சேரியில் 20.88 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதாகவும், 29.25 சதவீதம் பேர் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், 49.05 சதவீதம் பேர் மோசமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மத்திய அரசு திட்டத்துக்கு 6% ஆதரவு
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் 6.24 சதவீத மக்கள் மட்டுமே திருப்தியடைந்துள்ளனர். 22.71 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்தனர். 50.53 சதவீத மக்கள் திருப்தியடையவில்லை. அசாமில், சுமார் 41.94 சதவீத மக்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர். சுமார் 26.72 சதவீதம் பேர் ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 45.62 சதவீத மக்கள் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர். 23.49 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர். கேரளாவில், 28.67 சதவீத மக்கள் மிகுந்த திருப்தியும், 29.63 சதவீதம் பேர் ஓரளவு திருப்தியும் அடைந்துள்ளனர். புதுச்சேரியில், சுமார் 22.46 சதவீதம் பேர் மிகுந்த திருப்தியும், 23.7 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர்.

ராகுல்காந்தி பிரதமராக ஆதரவு
இந்தியப்  பிரதமரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு  வழங்கப்பட்டால் யாரை தேர்ந்ெதடுப்பீர்? அதாவது மோடியையா? அல்லது ராகுல்  காந்தியையா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில், கேரளாவில் 57.92 சதவீதம்  பேரும், தமிழகத்தில் 43.46 சதவீதம் பேரும் ராகுல்காந்தி பிரதமராக தேர்வு  செய்ய உள்ளதாக விருப்பம் தெரிவித்தனர். அதேநேரத்தில் கேரளாவில் மோடிக்கு  36.19 சதவீதம் ேபரும், தமிழகத்தில் 28.16 சதவீதம் பேரும் பிரதமராக ஆதரவு  தெரிவித்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் மோடிக்கு 54.13  சதவீதமும், அசாமில் 47.8 சதவீதமும், புதுச்சேரியில் 45.54 சதவீதமும் ஆதரவு  உள்ளது. ஆனால் ராகுலுக்கு மேற்குவங்கத்தில் 22.93 சதவீதமும்,  புதுச்சேரியில் 12.72 சதவீதமும், அசாமில் 22.93 சதவீதமும் ஆதரவு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : West Tamil Nadu ,Kerala ,Assam ,Tamil Nadu ,IANS , In Tamil Nadu, the DMK regime, likes, polls, information
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...