மதுரை மாவட்டத்தின் சோழவந்தானில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எம்எல்ஏக்கள் தொகுதி வளர்ச்சிக்கு என எதுவுமே செய்யாததால் மக்கள் கடும் டென்ஷனில் உள்ளனர். தற்போதைய எம்எல்ஏவான மாணிக்கம் மீது ஆளுங்கட்சியினரே புகார்களை அடுக்கி வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் 2வது முறையாக, மீண்டும் சிட்டிங் எம்எல்ஏவான மாணிக்கத்திற்கே சீட் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதிருப்தி அதிமுகவினர், தலைமையிடம் புகார் தெரிவிக்க சோழவந்தான், வாடிப்பட்டி, மதுரை மேற்கு ஒன்றியம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளிலிருந்து ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் என அதிமுகவினர் 1,500 பேர் 15க்கும் அதிக சொகுசு பஸ்களில் நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டு சென்றனர்.
அங்கு முதல்வர், துணை முதல்வரை சந்தித்து தங்களது கருத்தையும் முன் வைத்துள்ளனர். உட்கட்சி பூசலால் சோழவந்தானில் அதிமுக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாணிக்கம் எம்எல்ஏ தனது செல்வாக்கை பயன்படுத்தி சீட் பெற்றாலும், கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு அவருக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். மாணிக்கம் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதால் இபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளடி வேலைகளில் ஈடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.