திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி என்பதற்குப் பதிலாக, 6 கிராம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கடந்த 5 ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒன்றை மாற்றிப் பேசியோ அல்லது உளறிக் கொட்டியோ பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்வார். சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பெயரை விஜயலட்சுமி என்பதற்கு பதிலாக ஜெயலட்சுமி என கூறினார். இந்நிலையில், திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டியில் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கூட்டுறவு வங்கிகளில் 6 கிராம் அளவில் நகை அடகு வைத்தவர்களின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்” என்றார். முதல்வர் 6 பவுன் வரை, நகை அடகு வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி என தெரிவித்திருந்தார். ஆனால், அமைச்சர் 6 கிராம் என மாற்றி பேசியதால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அதிர்ச்சியும் குழப்பமுமடைந்தனர்.