×

கோவை வாளையார் வழியே கேரளாவுக்கு கடத்த முயன்ற ஜெலட்டின் குச்சிகள் சிக்கியது: இருவர் கைது

கோவை: கோவை மாவட்டம் வாளையார் வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 250 பெட்டி வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்ட எல்லையான வாளையார் செக்போஸ்ட் பகுதியில் கேரள கலால் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகன பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது கோவையிலிருந்து வந்த காய்கறி லாரியை அதிகாரிகள் பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சந்தேகத்தின்பேரில் மன்னார்க்காடு அருகே நோட்டமலை பகுதியில் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காய்கறிகளுக்கு அடியே 200 ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய 250 பெட்டிகளில் வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சரவணன் (30), இளவரசன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் தமிழகத்திலிருந்து வெடி பொருட்களை கடத்தி மலப்புரத்தில் ஒப்படைக்க கொண்டு வந்ததாக தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களின் மதிப்பு ரூ.1.5 கோடி என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kerala , Two arrested for trying to smuggle gelatin sticks to Kerala via Coimbatore
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...