×

புதுவை, கேரள மாநிலங்களுடன் சேர்த்து தமிழகத்தில் ஏப்.6ல் தேர்தல்: ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது : மே 2ல் வாக்கு எண்ணிக்கை : அசாமில் 3 கட்டம், மே.வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு

* தேர்தல் ஆணையம் அறிவிப்பு
* வேட்பு மனுதாக்கல் தொடக்கம் மார்ச் 12
* வேட்பு மனுதாக்கல் கடைசி நாள் மார்ச் 19
* வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 20
* வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22
* வாக்கு பதிவு ஏப்ரல் 6
* வாக்கு எண்ணிக்கை மே 2

புதுடெல்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. புதுச்சேரி, கேரள மாநிலங்களை போல், தமிழகத்திலும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இவற்றில் பதிவாகும் வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது. கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலமும் விரைவில் முடிகின்றன. இவற்றுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதே நேரம், கூட்டணியோ, தொகுதி பங்கீடுகளோ முடியாத போதிலும், இம்மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

தமிழகம் உட்பட தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு நேரடியாக சென்று, அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகள் நடத்தி வந்தது. தமிழகத்தில் கடந்த 10, 11ம் தேதிகளில் இக்குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முன்வைத்தன.இந்நிலையில், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் அமைந்துள்ள விக்யான் பவனில், நேற்று மாலை அளித்த பேட்டியில் 5 மாநில தேர்தல் தேதிகளை சுனில் அரோரோ அறிவித்தார். அவர் அளித்த பேட்டி வருமாறு: தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். அசாம் மாநிலத்தில் மார்ச் 27 (47 தொகுதிகள்), ஏப்ரல் 1 (39 தொகுதிகள்) மற்றும் ஏப்ரல் 6ம் (40 தொகுதிகள்) தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும்.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 (30 தொகுதிகள்) ஏப்ரல் 1 (30), 6ம் தேதி (31), 10ம் தேதி (44), 17ம் தேதி (45), 22ம் தேதி (43), 26ம் தேதி (36) மற்றும் ஏப்ரல் 29ம் தேதி (35 தொகுதிகள்) என மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் மொத்தம் 18.68 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கும். மனு தாக்கலுக்கு 19ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடக்கும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும். ஏபரல் 6ம் தேதி வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதியும் நடைபெறும். 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்திற்கு 3 கட்டங்களாகவும், 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்துக்கு 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படும். கடந்த தேர்தலில் இங்கு 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 5 மாநிலங்களிலும் மொத்தம் 824 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 18.68 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். இது, கடந்த தேர்தலை விட 34.73 சதவிகிதம் அதிகமாகும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும், தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி போடப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் போது வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபாலில் வாக்கு செலுத்தலாம். கொரோனா தொற்று அச்சம் காரணமாக, வாக்குப்பதிவு நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஏப்.13ல் அரோரா ஓய்வு
நாட்டின் 23வது தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் சுனில் அரோரா, 1980ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர். 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதே,  ஏப்ரல் 13ம் தேதி பதவி ஓய்வு பெறுகிறார்.
* 2 தேர்தல் பார்வையாளர்
தமிழக தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளான தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோல், மற்ற மாநிலங்களுக்கும் பார்வையாளர் நியமிக்கப்படுவார்கள்.
* வேட்பாளர் செலவு வரம்பு
ஐந்து மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் செலவு செய்யலாம். புதுவையில் ரூ.22 லட்சம் செலவு செய்யலாம்.
* கன்னியாகுமரி எம்பி தொகுதி இடைத்தேர்தல்
தமிழகத்தில் காலியாக இருக்கும் கன்னியாகுமரி, கேரளாவில் காலியாக உள்ள மலப்புரம் மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Kerala ,Azamil , New Delhi, Kerala along with other states will go to the polls on April 6 in a single phase: May 2: Counting of votes on May 2: Assam in 3 phases and Bengal in 8 phases.
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...