சென்னை: தா.பாண்டியன் (வயது 889) உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் காலமானார். வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் இருந்தது. ரத்த அழுத்தமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
88 வயதான தா.பாண்டியன் 1989 முதல் 1996 வரை இரண்டுமுறை வடசென்னை எம்.பி.யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2005 முதல் 2015 வரை 10 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்தவர். உசிலம்பட்டி வெள்ளைமலைப்பட்டியில் 1932-ல் பிறந்தவர். இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுகளை மொழிபெயர்த்துள்ளார். ஜனசக்தியில் 1962-ல் எழுத தொடங்கிய தா.பாண்டியன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் சவுக்கடி என்ற புனைபெயரில் கட்டுரைகளை எழுதினார். 8 நூல்கள் மற்றும் 6 மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார். தா.பாண்டியனின் மேடைப்பேச்சு, பொதுவுடையரின் வருங்காலம் போன்ற நூல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.