சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லம் அருகே 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். கிரீன்வேஸ் சாலையில் அதிகாலையில் திரண்ட அவர்கள் 15,000 பணியிடங்களில் 10,000 பணியிடங்கள் நிரப்பட்டதாக கூறினர்.
ஆனால் 5 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர் பணியில் ஈடுபட்டுள்ள தங்களை அரசு புறக்கணித்துவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். எஞ்சியுள்ள 5,000 பணியிடங்களில் தங்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மின்கம்பம், மின்கம்பிகள் அமைக்கும் வேலைக்கான கேங்மேன் பணிகளுக்கு 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களை தவிர்த்துவிட்டு புதியவர்களுக்கு பணிநியமனம் கொடுத்ததே பிரச்சனைக்கு காரணம். முதல்வர் இல்லம் அருகே திரண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களை போலீசார் அப்புறப்படுத்தி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.