பெங்களூரு: சிக்கபள்ளாபுரா மாவட்டம் ஹிரேநாகவள்ளி கிராமத்தில் நடைபெற்ற வெடி விபத்து சம்பவத்தில் என்னுடைய உறவினர்கள் யாருக்கும் தொடர்பு கிடையாது என்று அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். சிக்கபள்ளாபுரா மாவட்டம் நந்திமலை வளர்ச்சி தொடர்பாக அமைச்சர் சுதாகர் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஹிரேநாகவள்ளி கிராமத்தில் நடைபெற்ற ஜெலட்டின் வெடி விபத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் என்னுடைய உறவினர்களின் தொடர்பு இருப்பதாக சிலர் தவறான கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் என்னுடைய உறவினர்களுக்கு இதில் எந்த தொடர்பும் கிடையாது.
விபத்து நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் அதிகாரிகளின் அலட்சியம் என்று தெரிய வந்துள்ளதால் 2 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது போலீசார் நிரந்தரமாக சோதனை நடத்தி வருவதால் கல்குவாரி உரிமையாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத குவாரி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.