துரைப்பாக்கம், பிப்.26: பெருங்குடி ராஜிவ்காந்தி சாலையில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே, வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சவுரவ் மண்டல் (19) கடந்த 18ம் தேதி, முகம் சிதைந்த நிலையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அங்கிருந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், அதே பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்த, மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியை சேர்ந்த சுஜித் சர்கார் (21), சவுரவ் மண்டலை கொலை செய்தது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை பிடித்து விசாரித்தனர். அதில், சவுரவ் மண்டலும், சுஜித் சர்காரும் நண்பர்கள். இருவருக்கும் கடந்த 18ம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுஜித் சர்கார், சவுரவ் மண்டலை சரமாரி தாக்கியுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும், அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, சுஜித் சர்காரை கைது ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.