சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் பதவி, 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் காலியாக உள்ளது. மாநிலத்தில் திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் முழு நேர தலைவர் இல்லை. மேலும், 19 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் நிரந்தர உறுப்பினர்கள் இல்லாததால், வழக்கு தொடரும் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சக்தி சுகுமார் குரூப் அமர்வு, மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்டது.