ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்த நல்லு சின்னனின் மகன் வெள்ளத்துரை(40). இவர் ஆண்டிபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய தோட்டங்களில் தேங்காய் உரிக்கும் பணி செய்து வந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை பாலக்கோம்பை கிராமத்தில் இருந்து ராயவேலூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில், வெள்ளத்துரை மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் இது குறித்து ராஜதானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டிஎஸ்பி தங்க கிருஷ்ணன் மற்றும் ராஜதானி இன்ஸ்பெக்டர் உஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் அடித்து கொலை செய்யபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க எஸ்.ஐ சுல்தான் பாட்ஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.