×

40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் முற்றுகை... இந்தியா கேட் அருகே தோட்டங்களில் விவசாயம் செய்வோம் : விவசாயிகள் கடும் எச்சரிக்கை!!

டெல்லி : புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, உத்தரப் பிரதேச எல்லைகளில் 3 மாதங்களாக போராடும் விவசாயிகள், சாலை மறியல், ரயில் மறியல் என அடுத்தடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக 40 லட்சம் ட்ராக்டர்களுடன் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் பகுதியில் யுனைட்டட் கிசான் மோர்சா சங்கம் நடத்திய கிசான் மகாபஞ்சாயத்து இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராகேஷ் திகைத் பேசியபோது, “வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம். நாடாளுமன்ற பேரணிக்கான தேதி குறித்து எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும். விவசாயிகள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். நேரத்தை அறிவித்துவிட்டு டெல்லியை நோக்கி பயணிப்போம்.முன்பு நான்கு லட்சம் ட்ராக்டர்கள்தான் இருந்தன. இந்த முறை 40 லட்சம் ட்ராக்டர்களில் செல்வோம். விவசாயத்திற்கு பயன்படுத்தும் கருவிகளுடன் போராட்டத்தில் பி[பங்கேற்போம்” என்று தெரிவித்துள்ளார். டெல்லி இந்தியா கேட், நாடாளுமன்றம் கட்டிடம் அருகே உள்ள பூங்காக்களில் உழுது பயிர் விதைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடியரசு தினமன்று 4 லட்சம்
டிராக்டர்களுடன் விவசாயிகள் பேரணி நடத்தினர். தற்போது 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.


Tags : Parliament ,India Gate , Tractors, farmers
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...