சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 700 அரங்குகளுடன் கூடிய புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சற்று தாமதமாக புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற இருக்கிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 44-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 44-வது சென்னை புத்தக கண்காட்சியை துணை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
மாலை 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று பல ஆண்டுகளாக பதிப்புத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்களை கவுரவிக்க உள்ளார். ஒவ்வொரு நாளும் புத்தக கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறும். இந்த கண்காட்சி அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. கண்காட்சிக்கு அனுமதி கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். கண்காட்சியில் சுமார் 700 அரங்குகளுடன் 500 பதிப்பாளர்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள் இடம்பெற இருக்கின்றன.