மும்பை: உத்தரகாண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 பெண் குழந்தைகளை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி திடீரென உடைந்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலைய சுரங்கங்கள் சேதமடைந்தன. அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்தநிலையில், தபோவன் சுரங்கத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆலம் சிங் என்பவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.
அவரது திடீர் இழப்பால் ஆலம்சிங்கின் மனைவி உட்பட 4 பெண் குழந்தைகளும் நிலைகுலைந்து போயுள்ளனர். தகவலறிந்த பாலிவுட் நடிகர் சோனு சூட் 4 பெண் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றதோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது டிவிட்டரில், ‘இனி இந்தக் குடும்பம் என்னுடையது’ என்று பதிவிட்டுள்ளார். நடிகர் சோனுசூட் தொடர்ந்து பலருக்கும் உதவிக்கரம் நீட்டி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.