புதுடெல்லி : இரண்டு கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தி விட்டு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற எம்பியான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய தரப்பில் பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக ரூ.300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. அதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது சொந்த வேலை நிமித்தமாக? அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில்,கார்த்திக் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அவர் தற்போது வரை ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர் தான். அதனால் வெளிநாடு செல்ல அனுமதி வழங்க கூடாது. ஒருவேலை அனுமதிக்கும் பட்சத்தில் வைப்புத் தொகையை செலுத்தி விட்டு செல்ல நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் வெளிநாடு செல்ல எதற்காக நீதிமன்றத்தில் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிப்பதாகும், இருப்பினும் அவர் வைப்புத் தொகையாக ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இதில் கடந்த ஆண்டு வெளிநாடு சென்ற போது பத்து கோடியை வைப்பு தொகையாக கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.