சென்னை: பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியில் இருந்து சென்னை வழியாக விமானத்தில் நேற்று புதுடெல்லி திரும்பினார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனராக இருந்த கிரண்பேடி, கடந்த செவ்வாய் இரவு அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னராக நியமிக்கப்பட்டர். இதையடுத்து கடந்த புதன் மாலை தமிழிசை சவுந்தரராஜன், நியமிக்கப்பட்டு வியாழனன்று புதுச்சேரி மாநில கவர்னராக பொறுப்பெற்றுக்கொண்டார். பதவி நீக்கம் செய்யப்பட்ட கிரண்பேடி தொடர்ந்து, புதுவை மாநில கவர்னர் மாளிகையிலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கிரண்பேடி, சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக செய்தியாளர்களை சந்திப்பதுண்டு. எனவே தற்போதும் ஏதாவது பேசுவார் என்று ஊடகங்களும் வந்து காத்திருந்தன. கிரண்பேடி, புதுச்சேரி கவர்னர் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டு மாலை 4.35 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்திறங்கினார். எப்போதும் உற்சாகமாக வரக்கூடியவர். நேற்று மிகவும் சோர்வாக தலையை தொங்கப் போட்டுக் கொண்டே விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். ஊடகங்கள் நின்றபக்கம் திரும்பிக்கூட அவர் பார்க்கவில்லை.