புதுடெல்லி: உத்தரகாண்டில் பனிப்பாறைகள் உடைந்ததால் ஏற்பட்டுள்ள செயற்கை ஏரியின் ஆழம் குறித்து கடற்படை குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உத்தரகாண்டில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்ததால் கடந்த 7ம் தேதி சமோலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடர் காரணமாக ரிஷி கங்கா அருகே ரெய்னி கிராமத்தில் செயற்கை ஏரி உருவாகி உள்ளது. இந்த ஏரியின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வருகின்றது. எனவே செயற்கை ஏரியின் ஆழம், கொள்ளளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
ஏரியின் கரை வலுவாக இருக்கின்றதா, கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வெளியேறும் நீரின் அளவு உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. கடற்படையை சேர்ந்த டைவர்கள் மற்றும் விமான படை வீரர்கள் இணைந்து நேற்று முன்தினம் இந்த பணியை மேற்கொண்டனர். விமான படையின் நவீன ஹெலிகாப்டர் இந்த பணிக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் இருந்து செயற்கை ஏரிக்குள் குதித்து டைவர்கள் ஏரியின் ஆழத்தை கணக்கிட்டனர். ஏரியின் ஆழத்தை கணக்கிடுவதற்கு கடற்படையால் பயன்படுத்தப்படும் கருவி உபயோகிக்கப்படுத்தப்பட்டது. மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையின்படி, இந்த ஏரி 400 மீட்டர் நீளம், 25மீட்டர் அகலம் மற்றும் 60மீட்டர் ஆழம் கொண்டாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
* 67 சடலங்கள் மீட்பு
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சுமார் 200 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். தபோவன் சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி 15வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதற்கிடையே சுரங்கத்தில் இருந்து மேலும் 2 சடங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.