மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது குந்தாபாலம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியை சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளன. இரு தினங்களுக்கு முன் இப்பகுதியில் இரவு நேரத்தில் புலி ஒன்று தனது 3 குட்டிகளுடன் சாலையில் நடமாடியுள்ளது. அதை அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமுள்ள நிலையில் புலியானது மிகவும் அரிதாகவே காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது குட்டிகளுடன் புலி நடமாடுவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து குந்தா ரேஞ்சர் சரவணன் கூறுகையில், ‘‘குந்தா பகுதியில் புலி இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. சமூக வலைதளங்களில் குட்டியுடன் புலி நடமாடும் வீடியோவை நானும் பார்த்தேன். அது ஆறு மாதங்களுக்கு முன் பைக்காரா பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவாகும். அதை தற்போது குந்தாபாலம் பகுதியில் குட்டிகளுடன் புலி நடமாடுவதாக வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளனர்’’ என்றார்.