×

நாகர்கோவில் டவுண் ரயில் நிலைய முன்பதிவு மையம் இன்று திறப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக தற்போது நாகர்கோவிலிருந்து புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேளி, கொல்லம் மெமு ரயில் பயணிகள் ரயில்கள் நின்று செல்கிறது. இந்த ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி  பிலாஸ்பூர், திருநெல்வேலி  ஜாம்நகர்  ரயில்கள் மற்றும் தினசரி ரயிலாக திருச்சி  திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் நின்று செல்கிறது. இந்த ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதி கிடையாது. சாதாரண முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு மட்டுமே பெறமுடியும். அதற்காக தனியார் முகவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் அவர் வந்து பயணச்சீட்டு வழங்குவதும், ரயில் புறப்படும்போது பச்சைக் கொடி காட்டும் பணியையும் அவர் மேற்கொள்வதும் நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற கன்னியாகுமரி-திருவனந்தபுரம் மின்மயமாக்கம் திட்டத்தின் கீழ் உட்படுத்தி செயல்படுத்துவது என்று திட்டம் தீட்டப்பட்டு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு திட்ட ஒப்புதல் பெறபட்டது. ஆனால் மின்மயமாக்கும் பணிகளை செய்யும் மத்திய ரயில் மின்மயமாக்கும் நிறுவனம் நிதிப்பற்றாகுறை காரணமாக இந்த பணிகளை செய்யாமல் விட்டுவிட்டது.  கன்னியாகுமரி-திருவனந்தபுரம் வழித்தடம் மின்மயமாக்கல் பணிகள் 2012ம் ஆண்டு  நிறைவுபெற்று விட்டன. அடுத்து இந்த ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தநிலையில் இந்த ரயில் நிலையத்தை 31-03-2010  பார்வையிட்ட ரயில்வே இணை அமைச்சர் இ.அகம்மது இந்த ரயில் நிலையம் ஐந்து கோடி செலவில் மேம்படுத்தப்படும்  என்று அறிவித்தார். ஆனாலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

பின்னர் குமரி மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தை இரண்டு ரயில் தண்டவாளங்கள் கொண்ட கிராசிங் ரயில் நிலையமாக மாற்றி விரிவாக்கம் செய்ய தனிதனியாக என இரண்டு பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.  பின்னர் பல வருடங்களுக்கு பிறகு ரயில் நிலையத்துக்கு புதிய கட்டிடம் பணிகள் நிறைவுபெற்று திறப்புவிழாவிற்காக காத்துகொண்டு இருக்கின்றது.

இந்த ரயில் நிலையத்தில் புதிய கட்டிடத்தை திறந்து நிலைய அதிகாரி நியமித்து முன்பதிவில்லாத கணிப்பொறி வசதியுடன் கூடிய பயணசீட்டு கவுண்டரை பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. குமரி மாவட்ட பயணிகள் சங்கம் சார்பாக இந்த ரயில் நிலைய புதிய கட்டிடத்தை உடனடியாக திறந்து ரயில்வே நிலைய அதிகாரி கணிப்பொறி பயணசீட்டு ஊழியர் நியமித்து பயணிகள் வசதிக்காக செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  தற்போது  இந்த பணிகள் நிறைவு பெற்று இன்று (21ம் தேதி) ஞாயிற்றுகிழமை இந்த ரயில் நிலையம் முன்பதிவு மையம் மற்றும் பயணிகள் வசதிக்காக உள்ள கூடுதல் கட்டிடம் திறக்கப்பட உள்ளது.

Tags : Nagarco , Nagercoil, train, booking center, opening
× RELATED நாகர்கோவில் மாநகராட்சிக்கு 104 தூய்மை...