புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட் விவகாரத்தில் பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் 3 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதனிடையே, டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி திஷா மனு தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, ‘காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் இணைந்து திஷா டூல்கிட் தயாரித்தார். அது வெறும் டூல்கிட் விவகாரம் மட்டுமல்ல. அதன் மூலம், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உலகளாவிய சதியும், விவசாய போராட்டத்தை சீர்குலைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட செய்திகளை அழித்து விட்டார். இது அவருடைய சட்ட விரோதமாக செயல்பட்ட குற்ற உணர்வையும், கெட்ட எண்ணத்தையும் காட்டுகிறது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று போலீசார் தெரிவித்தனர். இதனைக் கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை, வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.