×

பூந்தமல்லி அருகே விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து ரசாயனம் கசிந்ததால் பரபரப்பு

பூந்தமல்லி: விசாகப்பட்டினத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு ரசாயனங்களை ஏற்றிக்கொண்டு லாரி நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் அருகே சென்றபோது சாலையோரம் நின்றிருந்த மற்றொரு லாரியின் மீது ரசாயனம் ஏற்றி வந்த லாரி உரசியது. இதில், ஏற்பட்ட அதிர்வால் ரசாயனங்கள் கொண்டு வந்த பேரல்கள் ஒன்றோடொன்று மோதி கசியத்தொடங்கியது. இதனால் வாகனத்தில் இருந்து புகை வர ஆரம்பித்தது. இதில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனத்தை கிரேன் உதவியுடன் தூக்கி சாலையோரம் எடுத்து வைத்தனர்.

மேலும், ரசாயன கலவை ஏற்றிவந்த வாகனம் எந்த நேரத்திலும் தீ பிடிக்கலாம் என்ற தகவலையடுத்து அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க பூந்தமல்லி மற்றும் பெரும்புதூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து பாதுகாப்புக்காக  நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், மாற்று வாகனம் கொண்டு வரப்பட்டு விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த ரசாயனங்களை வேறு வாகனத்தில் மாற்றி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ரசாயன ஆலைக்கு  அனுப்பிவைத்தனர். உரிய நேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டதால் ரசாயனம் ஏற்றி விபத்துக்குள்ளான வாகனம் தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Bhutamalli , Excitement over chemical leak from lorry involved in accident near Poonamallee
× RELATED சென்னையில் பாடி, கொரட்டூர், முகப்பேர்,...