புதுடெல்லி: ‘கேரளாவில் பாஜ வென்று ஆட்சி அமைத்தால் முதல்வர் பதவியேற்கத் தயாராக உள்ளேன்,’ என மெட்ரோ மேன் ஸ்ரீதரன் கூறியுள்ளார். மெட்ரோ ரயில் திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்டவர் தரன். இதன் காரணமாக, ஓய்வு பெற்ற பொறியாளரான இவர், ‘மெட்ரோ மேன்’ என்றே அழைக்கப்படுகிறார். வரும் 25ம் தேதி பாஜ.வில் இணைவதாக அறிவித்துள்ள அவர், தனது அரசியல் பார்வை ேநற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் மாறி மாறி கேரளாவை ஆட்சி செய்துள்ளன. ஆனால், மாநிலத்துக்கு எந்த வளர்ச்சியையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையை மாற்ற கேரளாவில் பாஜ ஆட்சி அமைக்க வேண்டும்.
பாஜ விரும்பினால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். கவர்னர் பதவியால் நேரடியாக எந்த நல்ல விஷயங்களையும் பொதுமக்களுக்கு செய்ய முடியாது. அதிகாரம் இல்லாத அப்படிப்பட்ட ஒரு பதவியை ஏற்க மாட்டேன். கேரளாவில் பாஜ ஆட்சி அமைத்தால் முதல்வர் பதவியேற்று செயல்படுவேன். கேரளா தற்போது கடன் வலையில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு மலையாள குடிமகனின் தலையிலும் ரூ.1.2 லட்சம் கடன் உள்ளது. நான் முதல்வரானால் கேரளாவை கடன் இல்லாத மாநிலமாக மாற்றவும் நடவடிக்கைகள் எடுப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.