ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 24.4.2017ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இவ்வழக்கில் தொடர்புடையதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையிலும், மற்ற 8 பேர் ஜாமீனிலும் உள்ளனர். இவ்வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில், சாட்டப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதன்படி, நேற்றைய விசாரணையின்போது, சிறையில் உள்ள சயான், வளையார் மனோஜ் மற்றும் ஜாமீனில் உள்ள 3 பேர் ஆஜரானார்கள். லாட்ஜ் உரிமையாளர் சாந்தா உட்பட 3 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின் வழக்கை வரும் 23ம் தேதிக்கு நீதிபதி அருணாசலம் ஒத்திவைத்தார்.