பெங்களுரூ சிறையில் இருந்து விடுதலையானவுடன் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்று கணக்குபோட்டிருந்தார் ஜெயலலிதா தோழியான சசிகலா. அதை உறுதி செய்யும் வகையில் பெங்களுரூ டூ சென்னைக்கு தமிழக எல்லையில் இருந்து சென்னை வரை 23 மணி நேரம், மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். இதனால் அதிமுக நிர்வாகிகள் மொத்தமாக நம்மிடம் ஓடி வந்து விடுவார்கள் என்று கருதினார். ஆனால் ஒருவர் கூட வரவில்லை. இதற்கிடையில், டிடிவி தினகரன் சில தொழில் அதிபர்கள் மூலம் பாஜக மேலிடத்திடம் தொடர்பு கொண்டு அதிமுகவுடன் கட்சியை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சசிகலாவுக்கு பொதுச் செயலாளர் பதவியை கொடுத்தால் கட்சியை இணைப்பதாகவும், பாஜக சொல்படி நடப்பதாகவும் உறுதியளித்தார்.இதற்கு சில பாஜக தலைவர்கள் சம்மதித்தனர். அமித்ஷா மட்டும் அமைதி காத்து வந்தார். பதில் கொடுக்கவில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதிமுகவை கைப்பற்ற திட்டம் தீட்டினர். அதன்படி எடப்பாடி பழனிச்சாமியை தனது ஆதரவு தலைவர்கள் சிலர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார் சசிகலா. அப்போது தனது ஆதரவாளர்களுக்கு 40 சீட் கொடுத்தால் போதும். அமமுகவை இணைத்து விடுகிறேன். மோதலில் ஈடுபட்ட தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்றார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. சசிகலாவிடம் கட்சியை கொடுத்தால், அது சாதி சங்கமாக மாறிவிடும். அமமுகவும் தற்போது சாதி சங்கமாகத்தான் உள்ளது.
தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வாக்களிக்கக் கூடிய கட்சியாகத்தான் உள்ளது. இதனால் கட்சியை எந்தக் காரணம் கொண்டும் சசிகலாவிடம் கொடுக்க முடியாது, 40 சீட்டும் தர முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் அமித்ஷாவிடம் சில தொழில் அதிபர்கள் மூலம் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார். அதில் 40 சீட் கொடுத்தால் போதும். அதிமுகவுடன் இணைக்கக் கூட வேண்டாம். கூட்டணி வைத்தால் போதும் என்று இறங்கி வந்துள்ளார் சசிகலா. இதற்காக பாஜ வேட்பாளர்களுக்கான மொத்த தேர்தல் செலவையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். கட்சி நிதியாகவும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் டெல்லியில் இருந்து மறுப்பு ஏதும் வரவில்லை. சாதகமான பதிலும் வரவில்லை. மறுக்கவில்லை என்பதால் தனக்கான கதவு திறந்தே இருப்பதாகத்தான் டிடிவி தினகரனும், சசிகலாவும் கருதுகின்றனர். இதனால் டெல்லியில் உள்ள தொழில் அதிபர்கள் மூலம் கூட்டணிக்கு தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனால்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வேலைகளை தொடங்கி செய்யும் நேரத்தில் அமமுக மட்டும் அமைதி காத்து வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் 6 சதவீத ஓட்டு வாங்கியது அமமுக. இந்த முறை 4 சதவீதத்தை தாண்டுமா என்ற சந்தேகம் எழத் தொடங்கிவிட்டது.
பல தலைவர்கள் திமுகவிலும், அதிமுகவிலும் சேர்ந்து விட்டனர். தொண்டர்களும் காணாமல் போய்விட்டனர். இதனால்தான் தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதயில் கூட டெபாசிட் கிடைக்காது என்று சசிகலாவும், டிடிவி தினகரனும் கருதுகின்றனர். இந்த தேர்தலோடு தங்களது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் கருதுகின்றனர். இதனால் எப்படியாவது அதிமுக கூட்டணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை மட்டுமே ஒற்றை குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதனால், டெல்லியின் கண் அசைவுக்காக காத்திருக்கின்றனர். இது தெரிந்துதான் கடந்த முறை சென்னை வந்த பிரதமர் மோடியிடம், சசிகலா விவகாரத்துக்கு மற்றுப்புள்ளி வைத்து முதல்வர் பேசியுள்ளார். அவரும் ஆதரவு தெரிவித்துவிட்டாராம். இதனால், பிரதமர் மோடி மூலம் அமித்ஷாவை சரிக்கட்டிவிட்டு, சசிகலாவை மொத்தமாக ஓரங்கட்டிவிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். ஆனால் எப்படியாவது அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட வேண்டும் என்று சசிகலாவும், டிடிவி தினகரனும் தீவிரமாக முயன்று வருகிறார்களாம்.