×

தடுப்பூசி போடப்பட்டதை அடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார்: மருத்துவர்கள் குழு விசாரணை

கோவை: கோவையில் தடுப்பூசி போடப்பட்டதால் 2 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் புகார் தொடர்பாக கமிட்டி அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மசக்காளிபாளையம் அருகே வசிக்கும் பிரசாத் - விஜயலட்சுமி தம்பதியின் 2வது குழந்தையான 3 மாத ஆண் குழந்தைக்கு அதேபகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறையினரால் நடத்தப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. பெண்டவளென்ட், ரோட்டா வைரஸ் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டுமருந்து குழந்தைக்கு போடப்பட்டிருந்தது. வீட்டிற்கு சென்ற பிறகு குழந்தை மயங்கியது.

இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் உடற்கூராய்வில் நிமோனியா காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. இந்நிலையில் சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த வெற்றிமாறன் என்ற இரண்டரை வயது குழந்தைக்கு மசக்காளிப்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த குழந்தைக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர். தடுப்பூசி போடப்பட்ட பிறகு இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து தனி மருத்துவர்கள் குழு விசாரித்து வருவதாகவும் அவர்களது ஆய்வு பின்னரே காரணம் தெரியவரும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

Tags : kovai, vaccine, child
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை