சென்னை: நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் ரவி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், நடிகர் விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் கதையை அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் முன்னரே தெரிவித்துள்ளார். அந்த கதையை படமாக தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தத்தை மீறும் வகையில், விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் தன்னிடம் கூறிய அதே படக்கருவை உருவாக்கி உள்ளனர். இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. சக்ரா படம் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தடையின் காரணமாக திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் வக்கீல் விஜய்சுப்பிரமணியன் ஆஜராகி படத்ைத வெளியிட தடையை நீக்க கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சக்ரா படத்தின் இயக்குனரான ஆனந்தன் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனர் ரவியிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் விஷாலுக்கு முன்பே தெரியுமா, தெரிந்து தான் படத்தை தயாரித்தாரா போன்ற விஷயங்களெல்லாம் விரிவான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.தற்போதைய நிலையில் படம் வெளியாக தடை விதித்தால் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
தியேட்டர்கள் முடிவு செய்யப்பட்டு, டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதால் தடை விதிப்பது வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகி
றது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் வைக்கப்படுகிறது. நாளை முதல் வரும் மார்ச் 5ம் தேதி வரையிலான படத்தின் முதல் இரண்டு வார வசூல் விவரங்களையும், ஒடிடி தளங்களுக்கு படம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதுதொடர்பான விவரங்களையும் நீதிமன்றத்தில் விஷால் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.