×

ஆபாச படங்களை பார்த்தால் ‘காப்பு’: சங்கு ஊதி திட்டத்தை துவக்கிய போலீஸ்

லக்னோ: ஆபாச படங்களை பார்ப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய தளங்களில் ஆபாச படங்களை பார்க்கிறார்களோ இல்லையோ, கூகுளில் ஆபாச படங்களை பற்றி தேடினால் கூட அவர்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, யாரேனும் ஒருவர் இணையத்தில் ஆபாச படங்கள் குறித்து தேடினால் உத்தரபிரதேச மகளிர் கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 1090க்கு தகவல் தெரிவிக்கலாம். இதைத்தொடர்ந்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்படும். இதன்பின்னர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

இந்த திட்டத்தை சங்கு ஊதி போலீஸ் அதிகாரிகள் துவக்கி வைத்தனர். இத்திட்டம் ஏற்கெனவே ஆறு மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. ‘இணைய பயன்பாடு அதிகரித்து வரும் காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 1090 உதவி எண் பெரும் உதவியாக இருக்கும்’ என போலீஸ் ஏடிஜிபி நீரா ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பொதுமக்கள் இணையத்தில் என்ன வகையான தகவல்களை தேடுகின்றனர்? ஆபாச படங்கள் குறித்து தேடுகின்றனரா என்பதை கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. யாராவது ஆபாச படங்கள் குறித்து தேடினால் உடனடியாக தகவல் கிடைத்துவிடும். அந்த நபர் தொடர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்’ என்றார்.

Tags : Pornography, see, bracelet ', trumpet, police
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...