நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதி மக்களுக்கு குடிநீர் முக்கடல் அணையில் இருந்து கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு பல வருடங்கள் ஆவதால் அவ்வப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் நிலை இருந்து வருகிறது. தற்போது புத்தன்அணை குடிநீர் திட்டபணிக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. குழாய் பதிக்க தோண்டும்போது பழைய குழாய்கள் உடையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதனால் மாநகர பகுதியில் ஆங்காங்கே அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர். தற்போது சில இடங்களில் உடைப்பு ஏற்படும்போது சில நாட்கள் கடந்த பிறகே அதனை சரிசெய்யும் நிலை இருந்து வருகிறது. கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடுகிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை மாநகராட்சி அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்முரசு செய்தியால் சீரமைப்பு
இதேபோல் நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனுக்கும் அண்ணா பஸ் நிலையத்திற்கும் இடையே உள்ள கேப் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக ஓடியது. இது குறித்த விரிவான செய்தி தமிழ்முரசு நாளிதழிலில் படத்துடன் வெளியானது. அதன் எதிரொலியாக அண்ணா பஸ் நிலையம் அருகே ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி இன்று முடிந்து தண்ணீர் சீராக விநியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.