தொண்டி: தொண்டி அருகே பாய்மர படகு போட்டி களைகட்டியது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள பாசிபட்டினம் கிராமத்தில் கங்காதேவி பூஜையை முன்னிட்டு மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் நேற்று பாய்மர பைபர் படகு போட்டி நடைபெற்றது. கிராம தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மீனவர் சங்க தலைவர் பழனியாண்டி முன்னிலை வகித்தார். 27 படகுகள் போட்டியில் கலந்து கொண்டன. ஒவ்வொரு படகிலும் 6 பேர் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தகுதி வாய்ந்த வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 15 கடல் மைல் தூரம் போட்டி நடைபெற்றது. தொண்டி புதுக்குடி கருப்பையா ரெத்தினவேல் படகு ரூ.30 ஆயிரம் முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம் நடராஜன் படகும், மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம் நம்புதாளை ஆறுமுகபடை படகும் பெற்றது. வீரர்களுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.