×

கோவையில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது : பெற்றோர் கதறல்!!

கோவை: கோவையில் தடுப்பூசி போட்ட 3 மாத கைக்குழந்தை பரிதாபமாக இறந்தது. கோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள சுப்பண்ணா வீதியை சேர்ந்தவர் பிரசாத்.‌கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை இருந்தது. நேற்று குழந்தைக்கு அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வைரஸ் நோயை தடுப்பதற்கான ஊசி போடப்பட்டது. சுகாதாரத்துறை மூலமாக முகாம் நடத்தப்பட்டு இந்த தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போட்ட பின்னர் குழந்தை கிஷாந்த் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தான். பால் குடிக்கவும் மறுத்துவிட்டான். இதைத்தொடர்ந்து விஜயலட்சுமி குழந்தைக்கு சுகாதாரத்துறையினர் வழங்கிய சொட்டு மருந்து நான்கு சொட்டு கொடுத்தார். இதை குடித்த பின் குழந்தை கிஷாந்த் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மசக்காளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். டாக்டர்கள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். கோவை மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

குழந்தைக்கு சளி மற்றும் மூச்சு விடுவதில் பாதிப்பு இருந்த நேரத்தில் தடுப்பூசி போட்டதும் குழந்தைக்கு பாதிப்பு அதிகமாகி இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.குழந்தை இறந்த சம்பவம் மசக்காளிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : baby ,Coimbatore ,Parents , குழந்தை
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…